10/1

பறையர்கள் / அத்தியாயம் 1
சாதி என்பது தமிழ்ச் சொல், வடமொழியில் ஜாதி என்றானது. சாதி என்னும் தமிழ் சொல்லுக்கு இன்றைக்கு நாம் கொண்டுள்ள பொருள் சங்க காலத்தில் இல்லை.
தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் ஒரே வகையான இனத்தைச் சார்ந்த செடியினம் அல்லது உயிரினம் ஆகியவற்றைக் குறிக்க Family என்ற சொல்லைப் பயன்படுத்துவர். இந்த ஆங்கிலச் சொல்லுக்குக் குடும்பம், குடும்ப உறுப்பினர், தொகுதி, பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச் சிறப்புக் குழு, இனம், நேசத் தொடர்பு கொண்ட இனத்தொகுதி என்று பல்வேறு பொருள்கள் உண்டு. இதே அடிப்படையில் தான் சாதி என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டது.
நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே’ (தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல்) என்பது நூற்பா. நீருள் வாழும் இனங்களில் நந்து என்பதும் நாகு என்பதும் பெண்பால் பெயர்பெறும் என்பது இதன் பொருள். இதைப் போன்றே மணிமேகலையிலும் ஒரு குறிப்பு வருகிறது.
பயிலொளி யொடுபொரு ளிடம்பழு தின்றிச்
சுட்ட றிதல்கவர் கோட றோன்றாது
கிட்டிய தேச நாம சாதி
குணக்கிரி யையி னறிவ தாகும்
இன்னோரிடத்தில் இப்படி வருகிறது.
சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி
விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்
இந்த இரு இடங்களிலும் வரும் சாதி என்ற சொல், வகை அல்லது பண்பு என்ற பொருளில்தான் ஆளப்பட்டுள்ளது.
ஆக, சங்க காலத்தில் சாதி என்னும் சொல் வழக்கில் இருந்தாலும் அது மனித இனத்தைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்து, தனிமைப்படுத்தியுள்ள இக்கால சாதி என்ற பொருளில் வழங்கப்படவில்லை என்பது உறுதி.
சாதி என்னும் சொல்லுக்கு நிகராக ஆங்கிலத்தில் வழங்கும் சொல் Caste என்பதாகும். இந்தச் சொல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி தரும் விளக்கம் இது.
சாதி என்ற பொருளை உணர்த்தும் இச்சொல் ஸ்பானிஷ் மொழியில்தான் முதன் முதலில் தோன்றியது. பின்னர் இந்தியச் சமூகத்தில் நிலவும் மிகவும் இறுகிப்போன சமுதாய விதிகளைக் குறிக்கும் சொல்லாக இது 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரால் வழங்கப்பெற்றது.
இச்சாதி அமைப்பு (காஸ்ட் சிஸ்டம்) தனி மனிதர்களை அவர்களுடைய பிறப்பு, தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. இவ்வாறு வரிசைப்படுத்தும் முறையும் அச்சமூக அமைப்பில் உள்ள திருமணம் மற்றும் சமூக உறவுகளால் (சோஷியல் இண்டர்கோர்ஸ்) பாதுகாக்கப் பெற்று, இந்து அல்லாத பிற ஆசியச் சமூகங்களிலும் இடம்பெற்று விட்டது.
இந்தியாவில் தொன்றுதொட்டு நிலவிய நால் வருணப் பாகுபாடே சாதிகள் தோற்றம் கொள்ளக் காரணமாயின என்ற கருத்து தவறானது. வேத காலத்துக்குப் பின்னர் தோன்றிய வணிகக் குழு, தொழில் குழு (கில்ட்) ஆகியவற்றின் விளைவே சாதியின் தோற்றத்துக்குக் காரணம். (The Oxford Reference Dictionary, பக்கம் 137).
சாதிகளின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே இரண்டு வகையான கருத்துகள் நிலவுகின்றன. இந்தியச் சமுகம் பற்றி ஆராயும் மேலைநாட்டுஇந்தியவியல்அறிஞர்கள் (இன்டாலஜிஸ்ட்) சாதிகளின் தோற்றத்துக்கு ஆரியர்களோ அவர்களின் வேதங்களோ காரணமாக அமையவில்லை என்றும் ஆரியர் இந்தியாவுக்கு வந்து, சிந்துச் சமவெளியிலிருந்து கங்கைச் சமவெளிக்குப் பரவிய பின்னரே இந்தியாவில் சாதிகள் அரும்பத் தொடங்கின என்றும் கருதுகின்றனர்.
இந்தக் கருத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதுதான் மேலே கண்ட சாதிகள் பற்றிய ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் விளக்கம். இத்தகைய கருத்தை உருவாக்கிய அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் Dr. Muir, அமெரிக்க அறிஞரான Henrich Zimmer ஆகியோர்.
சாதிகளின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களின் நான்கு வேதங்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட உபநிடதங்களும் தரும சாத்திரங்களுமே அடிப்படை என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் மற்றொரு பிரிவினர். இவர்கள் பார்ப்பனர்களையும் அவர்களுடைய வேத வேள்விப் பண்பாடுகளையும் எதிர்த்தனர். சாதியின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களே காரணம் என்னும் கருத்தின் அடிப்படையில் அவர்களைக் கண்டித்தும் மறுத்தும் வந்துள்ளனர்.
இந்தியாவில் தோன்றிய அனைத்து மனித நலச் சிந்தனையாளர்களும் அதாவது வள்ளுவர், கபிலர் (சாங்கியக் கோட்பாட்டை நிறுவியவர்) புத்தர் முதல் தந்தை பெரியார், அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபூலே முதலான அனைவரும் இப்பிரிவைச் சார்ந்தோர் எனலாம். இந்தியாவில் நடந்த சாதி ஒழிப்புக்கான போராட்டங்கள் அனைத்தும் பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களாகவே அமைந்துள்ள வரலாற்று உண்மையும் சாதிகளின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களே காரணம் என்பதை உறுதி செய்கிறது.
அம்பேத்கர் சாதிகளை ஆய்வு செய்து, ‘அகமணமே (endogamy) சாதிக்குரிய தனித் தன்மையான ஒரே இயல்பு ஆகும்’. அதாவது கலப்பு மணம் செய்து கொள்வதற்கான தடைகளிலிருந்துதான் சாதிகள் தோன்றுகின்றன என்று விளக்குகிறார். மேலும் :
1.    இந்திய மக்கள் ஒரு கலவையான உருவாக்கமாக இருந்தபோதிலும்கூட அவர்களிடைய ஓர் ஆழ்ந்த பண்பாட்டு ஒத்திசைவு உள்ளது.
2.    மிகப்பெரிய பண்பாட்டு அலகைத் தனித்தனிச் சிப்பங்களாக ஆக்குவதே சாதி.
3.    ஒரு சாதியிலிருந்து மற்றெல்லா சாதிகளும் உதயமாயின.
4.    பார்த்தொழுகுதல் (imitation) விலக்கி வைக்கப்படுவதாலும் வர்க்கங்கள் சாதிகளாயின.
என்றும் அம்பேத்கர் வகைப்படுத்துகிறார்.
தமிழ்நாட்டில் சாதிகளின் தோற்றமும், வளர்ச்சியும்என்ற தலைப்பில் ஆய்வு செய்த முனைவர் கே.ஆர்.அனுமந்தன் பின்வரும் காரணங்களே சாதிகளின் தோற்றத்துக்கு அடிப்படை என்கிறார்.
1.    அகமணம்தன் சொந்த சாதிக்குள்ளேயே மணம் செய்தல். அதன் வாயிலாகப் பிறசாதியுடன் மண உறவைத் தடுத்தல்.
2.    பிற சாதியினருடன் கலந்துண்ணத் தடை.
3.    பரம்பரைத் தொழில் (கற்பனை அல்லது உண்மை)
4.    தன் பரம்பரையின் தொடக்கம் குறித்த கோட்பாடு (தெய்வீகத்தன்மை அல்லது மனித மூலம்).
5.    புரோகித அமைப்பில் பார்ப்பனர்க்கு உயர்வும் சூத்திரர்க்கு தாழ்வும் கற்பித்த சமூக அமைப்பு.
6.    சாதி நீக்கம் (Ex-communication).
7.    சமயச் சடங்கின் புனிதம் கற்பித்தல். அத்துடன் தூய்மை அற்றவர் எனச் சிலரைச் சமய சடங்குகளிலிருந்து விலக்கி வைத்தல்.
தமிழ்ச் சமுதாயத்தில் ஐந்திணைகளிலும் இருந்த மக்கள் பெரும்பாலும் இனக்குழுவினராகவே இருந்திருப்பர். தொழில் அடிப்படையில் வேறுபட்ட இந்த இனக்குழுக்கள் பெரும்பாலும் அகமணக் குழுக்களே. அக்காலத்தில் சாதியோ, வர்ணாசிரமமோ இருந்திருக்காது.
நால்வருணம் பற்றிக் கூறும் தொல், பொருள், மரபியல் சூத்திரங்கள் (71-85) இடைச் செருகல் என்பதை அனைவரும் ஏற்கின்றனர்.
ஆரியர்களின் தாக்கம் தமிழ்நாட்டில் கி.மு. 4ம் நூற்றாண்டை ஒட்டியே மெதுவாகத் தொடங்கியிருக்கும். சமணர், புத்தர், பிராமண மதத்தினர் என்ற வரிசையில் இத்தாக்கம் இருந்திருக்கும். பிராமணர் தமது வருணாசிரமக் கொள்கையைத் தன்னல நோக்குடன், திராவிட இனக்குழுச் சமூகத்தை வேதியியல் மாற்றம் அடையச் செய்ய சாதிகளையும் சாதி வேற்றுமைகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் உருவாக்கினர். தமிழகத்தில் இவ்வகையில் ஆரியத்தாக்கம் ஏற்பட்ட காலம் கி.பி. 600க்கும் பின்னர்தான் இருக்க வேண்டும் என்கிறார் பி.டி.சீனிவாச ஐயங்கார்.
0
புத்தர் வாழ்ந்த காலத்தில் சாதிவருண அடிப்படையிலான சமூக உறவுகள் முழுமையடையாத நிலையில் உற்பத்தி உறவுகள்தான் சமூகத் தகுதியை தீர்மானித்தன. நிலத்தின்மீது ஆளுகை செலுத்தியவர்கள்கஹபதிகள் என்று அறியப்பட்டனர். அவர்களுக்கென சாதி அடையாளமோ வருண அடையாளமோ இருந்ததாகத் தெரியவில்லை. அதே சமயம் நிலமற்ற உழைப்பாளிகளும், ஏவல் தொழில் புரிந்தவர்களும் குறிப்பிட்ட வருண, சாதி அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை. இவர்கள்தாசர்கள்என்றும், ‘கம்ம (கரும)க்காரர்கள்என்றுமே பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. உணவையும் ஊதியத்தையும் எதிர்பார்த்தே இவர்கள் உழைத்ததாகத் தெரிகிறது. இக்காலகட்டத்தில் செல்வர்வரியவர் என்ற அடிப்படையில் சமுதாய உறவுகள் முரண்பட்டிருந்தனவே ஒழிய மேல்கீழ் வரிசையில் நிறுத்தப்பட்ட சாதி நிலைகளின் அடிப்படையில் அல்ல.
கி.பி. 500-1000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் விவசாய விரிவாக்கம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது. மேலும், ஏற்றத்தாழ்வுகள் சாதியப் பாகுபாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டது. காவேரி ஆற்றுப் பகுதியில்தான் சாதிப் படிநிலை அமைப்பு முதன் முதலில் உருத்திரட்டு பெற்றது. மூவேந்தர்களின் ஆட்சியில்தான் முழுமையாக ஏர்கொண்டு உழுதல் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்பமும், குலக்குழுவும் நிலத்தில் பாடுபட்ட நிலைமை மாறி அடிமைகளையும், கூலிகளையும் கொண்டு விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. முடி மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு மானியங்களாக வழங்கிய நிலங்களில்தான் இந்த அடிமை முறை முதலில் கையாளப்பட்டது.
பார்ப்பனர்களே ஆண்டைகளாக விளங்கியதுடன், நாட்டில் அவர்கள் மேலாண்மையும் செலுத்தி வந்தனர். சமுதாயத்தில் நெறி வகுப்பவர்களாக நிதி, நியாயம் முதலியவற்றை வரையறுத்துத் தீர்மானிப்பவராக தம்மை நிலை நாட்டிக் கொண்டு விவசாயக் கூலிகளையும், ஏனைய தொழில் பிரிவினரையும் சாதிகளாக அடையாளப்படுத்தி அச்சாதிகளை மேல்கீழ் வரிசையில் நிறுத்தி இன்றுள்ள சாதிப்படிநிலை அமைப்புக்கான வித்துகளை அன்றே அமைத்தனர். தீண்டாமை அன்றே அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்டாய உழைப்பாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் அடிமைகளாக, கூலிகளாக, சேவைப் பணியாளர்களாக வாழ நிர்பந்திக்கப்பட்டனர். இவர்களுக்கென்று தனி வாழ்விடங்கள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் அசுத்தமானவர்கள்கீழானவர்கள் என்று கருதப்பட்டனர். இவர்களது உழைப்பைத் தொடர்ந்து சுரண்டுவதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட தீண்டாமையானது தூய்மையுடன் தொடர்புப்படுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து அவ்வாறே நீடிப்பதற்கான வலுவான நியாயங்களை தீண்டாமை தொடர்பான கருத்தாடல்கள் வழங்கின.
சாதி அமைப்பானது, குறிப்பிட்ட தொழில் புரிவோரைக் குறிப்பிட்ட சாதியாக அடையாளப்படுத்தி அத்தொழிலை அந்தச் சாதியும், அதனை ஒத்த சாதிகளும் மட்டுமே புரிய வேண்டும் என்று சட்டம் வகுத்து, அச்சாதியில் பொருளாதார, சமுதாய அந்தஸ்தையும் நிர்ணயம் செய்தது.
குறிப்பிட்ட வருணத்தின் அல்லது சாதியின் தனித்தன்மையையும் அடையாளத்தையும், நிலைநிறுத்த சில சட்டங்களும் கட்டுப்பாடுகளும் வகுக்கப்பட்டன. இன்ன சாதியார் இன்ன தொழிலைத்தான் செய்யலாம்; இன்ன சாதியார் மட்டுமே நிலவுடையாளராக இருக்க முடியும்; இன்னார்தான் அரசாள முடியும், ஆன்மிக அறிவாளிகளாக இருக்க முடியும்; சில சாதிகள் தூய்மையானவை, வேறு சில தீட்டுப்பட்டவை என்ற ரீதியில் அக்கட்டுப்பாடுகளும், சட்டங்களும் அமைந்தன.
தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள், மக்கள் செய்து வந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயிணர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரத்வர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப்பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக்குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமணக்கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து வயிறு பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க முடியாத ஓர் உறுப்பாகவே செயல்பட்டு வந்தது.
இனம், நிலம் ஆகிய வேறுபாடுகளால் இடர்பட்டுத் தடுமாறாத தமிழரின் சமூகம் காலப்போக்கில் பல சாதிகளாகப் பிரிந்தது. மக்களுக்குப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. பழந்தமிழகத்தில் திணைப் பிரிவுகளின் படியே வாழ்ந்து வந்த மக்கள் அந்த வாழ்க்கை முறைலிருந்து நழுவினர்.
000000000000000000000000000000000000000
பறையர்கள் / அத்தியாயம் 2
முல்லை நிலத்து இடையனும், குறிஞ்சி நிலைத்துக் குறவனும், மருத நிலத்து வேளாண் பெண்ணை மணக்க முடியாது. அதைப் போலவே மருத நிலத்து வேளாண் இளைஞன் ஒருவன் நெய்தல் நிலத்துப் பரதவப் பெண்ணை காதலித்தல் இழுக்காகக் கொள்ளப்பட்டது.
தமிழக வரலாற்றில் சங்ககாலம் ஒரு பொற்காலம் எனக் கருதப்படுகிறது. அப்போது மிகச் செல்வாக்காக இருந்ததாகக் கருதப்படும் நான்கு குடிகள் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்பவையாகும். இந்தக் குடிகளை விடச் சிறந்த குடிகள் வேறு இல என்று அவர்களுடைய தொழிலின் சிறப்பைப் பாராட்டி மாங்குடி கிழார் பாடியுள்ளார்.
பண்டைய காலத்தில் மனித இனம் சிறு சிறு குழுக்களாக அமைந்திருந்தது. உணவுக்கும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மனித இனம் ஓரிடத்திலேயே நிலைத்து நிற்காமல் உணவு கிடைக்கும் பல்வேறு இடங்களை நோக்கி அலைந்து கொண்டிருந்தது. உணவுக்குரிய இடம் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர் அவ்விடத்துக்கு வரும் புதிய குழுக்களின் ஊடுருவலைப் பிறிதொரு கூட்டம் தடுத்து நிறுத்தியது. இந்த உறவு, இதனடிப்படையில் நிலவிய பொதுமை உணர்வுப் பகிர்வு ஆகியன கூட்டங்கள் அல்லது குழுக்களாக இருந்த அமைப்புகளைக் குலக் குழுக்களாக மாற்றம் பெறச் செய்துள்ளன.
அதாவது, கூட்டங்கள் அல்லது குழுக்கள் ஒவ்வொன்றும் குலத் தலைமை, தனிக் குல மரபுச் சின்னம், பொது மண உறவில் தடை ஆகியவற்றின் மூலமாக ஒன்றையொன்று வேறுபடுத்திக் கொண்டன. குலக் குழுக்களிடம் காணப்பட்ட இத்தகைய சிறுசிறு வேறுபாடுகளையே சாதிப்பிரிவினைகள் தோன்றுவதற்குரிய அடிப்படையாக அமைத்துக் கொள்ளலாம். ஆதிகால மனிதன் அல்லது குழுக்கள் உட்கொண்ட உணவுப் பொருள்களே குழுக்களைப் பிரிக்கும் குலச் சின்னங்களாக அமைந்தன.
0
மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் படிநிலை சமூகம் அமைந்திருந்தது. ஆயர் அல்லது இடையரும், வேட்டுவர் அல்லது வேடரும் உழவருக்கு அடுத்த படியில் உள்ளவர்கள், பொற்கொல்லர், கருமான், தச்சர், குயவர், முதலிய கலைத் தொழிலாளர் ஆயர்களுக்கு அடுத்த படியிலுள்ளவர்கள். அவர்களுக்கு அடுத்தது, படையாச்சியர் அல்லது படைக்கலம் மேற்கொண்டவர்கள். வலையர் அல்லது மீன் தொழிலாளரும் புலையர் அல்லது தோட்டிகளும் கடைசிப் படியிலிருந்தார்கள்.
உயர் வகுப்பினர் தெருவில் சென்றபோது தாழ்வகுப்பினர் அவர்களுக்கு வழிவிட்டனர். பெருமகனைக் கண்ட புலையன் அல்லது தோட்டி வழிபடுபவன் போல இருகைகளையும் கூப்பித் தலைவணங்கினார்.
அடிமைத்தனம் தமிழரிடையே இருந்ததில்லை. தமிழரிடையேயுள்ள மேற்காட்டிய வகுப்பு முறை மெகஸ்தனிஸ் கண்டு தீட்டிய பண்டை மகதப்பேரரசிலுள்ள மக்கள் நிலையைப் பெரிதும் ஒத்துள்ளன.

மெகஸ்தனிஸ் குறித்துள்ளபடி மக்கள் தொகுதி ஏழு வகுப்புகளாகப் பிரிவுபட்டிருந்தது.
முதலாவதாக, அறிவர் வகுப்பு. இவர்கள் தொகையில் மிகமிகக் குறைவானவர்களே. தனிப்பட்ட மனிதர்களால் அவர்கள் வேள்விகளிலும் மற்றத் திருவினைகளிலும் ஈடுபடுத்தப்பட்டார்கள். அறிவர்கள் பொது மக்களுக்கு அந்த ஆண்டின் பஞ்சப்பருவங்கள், மழை, அரசியல் கோளாறுகள் ஆகியவை பற்றி அறிவுரை நல்கினர். இந்த அறிவர்கள் ஆடையற்றவர்களாகவே இருந்தார்கள்.
இரண்டாவதாக, உழவர் வகுப்பு. இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் நேரம் முழுவதையும் நிலம் பண்படுத்துவதிலேயே செலவிட்டனர். ஆயர்களும் வேடர்களும் மூன்றாம் வகுப்பினர். அவர்கள் தங்கள் கால்நடைகளைப் பேணியும், கூடாரங்களில் தங்கியும் நாடோடி வாழ்வு வாழ்ந்தனர்.
நான்காவது, தொழில் வகுப்பு. பொருள்கள் வாங்கி விற்றல், கூலிவேலை செய்தல் அவர்கள் வேலை. படைக்கலத் தொழிலாளரும், கவசத் தொழிலாளரும், எல்லா வகைப்பட்ட கலைத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர்.
போர் வீரர் ஐந்தாம் வகுப்பினர். அவர்கள் அரசன் செலவில் வாழ்ந்து வந்தனர். ஆறாவது வகுப்பு மேற்பார்வை செய்தது. நாட்டிலும் நகரிலும் நடப்பதை ஒற்றறிந்து அரசனுக்கோ, தண்டலாளருக்கோ அறிவிப்பது அவர்கள் கடமை.
ஏழாவது வகுப்பு தன்னாட்சியுடைய நகரங்களில் பொது ஆட்சிக்காரியங்களில் மன்னன் அல்லது தண்டலாளர்களுக்கு அறிவுரை கூறிய மன்றத்தாரைக் கொண்டது.
ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு மாறுவதற்கு அனுமதியில்லை. ஓர் உழவன் இடையனாகவோ அல்லது இடையர் வகுப்பைச் சேர்ந்தவர் கலைத்தொழில் வகுப்பிலிருந்து பெண்கொள்ளவோ முடியாது. அறிவர் வகுப்புக்கு மட்டும் இச்சட்டதிட்டம் முழுவிலக்களித்தது. அவர் எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். ஏனெனில் அவர் வாழ்வு எளிதான ஒன்றல்ல.
0
இன்று ஒவ்வொரு சாதியும் அகமண உட்சாதிகளாகப் பிரிந்து ஒவ்வொன்றுக்குள்ளும் கரை, கூட்டம், வகையரா, பரம்பரை, வம்சம், குலம் என்று சொல்லக்கூடிய பல புறமணக் குழுக்கள் உள்ளன.

இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு சாதியும் பல கால்வழிக் குழுக்களாகப் (வம்சம்) பிரிகின்றன. ரத்த உறவையும், சந்ததியின் தொடர்ச்சியையும் குறிக்கும் இக்குழுக்கள் குலம், கோத்திரம், கூட்டம், பரம்பரை, வகையரா, வம்சாவளி போன்ற பல சொற்களால் குறிக்கப்பட்டுகின்றன.
தமிழ்ச் சமூகத்துக்கு நேரிட்ட சாதி இன்னல்களைக் கண்டு பல அறிஞர்கள் அவ்வப்போது தமிழருக்கு அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர்.

பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா - செய்தொழில் வேற்றுமை யான் என்றார் திருவள்ளுவர். இது மக்கள் சமூகத்தில் வாழவேண்டிய முறைகளை வகுக்கும் புறத்திணை இலக்கணமாகும். திருமூலர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் திருமந்திரம்) என்று கூறி மக்களைத் திருத்த முயன்றனர்.
ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்
என்று வினவுகிறார். ராமலிங்க அடிகளார், சமயம் குல முதல் சார்பெலாம் விடுத்த. அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி என்றும் சாதி குலமென்றும்ஓதுகின்ற பேயாட்டம் என்றும் சாதி வேறுபாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறார்.
0
ஆனால் யார் வந்து என்ன சொன்னாலும்சாதிஎன்ற மாய கௌரவத்தை இங்கு யாரும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
சாதிகளின் இருப்பு ஒருபுறம் இருந்தாலும் சாதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் பெருகவே செய்தது. கி.பி. 52க்குப் பின் மலபாரில் வந்து குடியேறிய அராபியர்கள் தொடர்பால்மாப்பிள்ளைஎன்னும் சாதியினர் தமிழகத்தில் தோன்றினர். கி.பி. 6ம் நூற்றாண்டில் ஹர்ஷர் காலத்தில் சமூகத்துறையில் சாதிக் கட்டுப்பாடு, தீண்டாமை ஆகியவை வலுவாக மேற்கொள்ளப்பட்டன.
கி.பி. 7ம் நூற்றாண்டில் வர்த்தனர் ஆட்சிக்காலத்தில் சாதிகளின் எண்ணிக்கை மேலும் மேலும் வளர்ந்து வந்தது. பிறப்பால் சாதி தோன்றுகிறது என்னும் கருத்து வேரூன்றலாயிற்று. தொழில் அடிப்படையில் பிறந்திருக்கக்கூடிய சாதி, தொழில் மாறினாலும் மாறாத நிலையில் நிலைபெற்றது. இந்தியாவில் சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில், சிறுசிறு சாதிகளும் புது சிறு உட்சாதிகளும் தோன்றின. இக்காலக்கட்டத்தில் இந்து சமுதாயத்திலிருந்த சாதிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனது.
13ம் நூற்றாண்டில் மன்னன் இறைவனாகவே கருதப்பட்டான். அவன் திருமாலின் அவதாரம் என்ற கருத்து நிலவியது. உடையார், ஆழ்வார், பெருமாள் ஆகிய சொற்கள் இருவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டன. சமய குருக்கள் அரசவையிலேயே சமயக் கடமைகளில் துணை புரிந்தனர். அவர்களுக்கும் உடையார் எனப் பெயர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கல்வி, உயர்மட்டத்திலிருந்த குடிமக்களுக்கே உரியதாக இருந்தது. வேதம், புராணம், இலக்கணம், தர்க்கம் போன்ற வடமொழிக் கல்வியே நிறுவனங்களில் அளிக்கப்பட்டது. பிற தொழில்நுட்பங்கள், கலைகள் ஆகியவை குல மரபில் வழிவழியாகவே கற்றுக் கொடுக்கப்பட்டன.
மக்களின் வேளாண் பெருமக்கள், வணிகப்பெருமக்கள், பிராமணர்கள், தேவரடியார்கள் சமுதாயத்தில் மேல்தட்டில் இருந்தனர். உழுவோர், படைவீரர்கள், தொழில் வினைநர்கள் ஆகியோர் அடுத்த நிலையிலும் விளங்கினர். நிர்வாகம்; நாடு, நகரம், சபை ஆகியவற்றின் கைகளில் இருந்தது. ஏனையோர் அனைவரும் இம்மூன்றைச் சார்ந்து வாழ்ந்தனர். வேளாளரில் இருந்தும் பிராமணரிலிருந்தும் அரசியல் அதிகாரிகளும் படைத்தலைவர்களும் தோன்றினர்.
வேந்தர்கள் குலங்களையும், பிராமணர்கள் கோத்திர, சூத்திரங்களையும் கொண்டிருந்தனர்.
சாதிகள் தொழிலடிப்படையில் வகுக்கப்பட்டிருந்தன. அவரவர்க்குத் தனியான குடியிருப்புகளும் இருந்தன என்பதைக் கம்மாளச் சேரி, பறைச்சேரி, தளச்சேரி போன்ற பெயர்கள் காட்டும். மனுவின் நெறி இன்று சாதியொழுக்கத்தைக் காப்பதை அரசர்கள் தம் பெருமையாகக் கருதினர். அவ்வச் சாதியினர் தம் பெருமையினைப் பறைசாற்றிக் கொள்ள இலக்கியங்களையும் படைத்துக் கொண்டனர்.

00000000000000000000000000000000000
ஆப்பிரிக்கத் தாய்பறையர்கள் / அத்தியாயம் 3
இந்தியா முழுமைக்கும் மக்களுக்கு நற் கருத்துக்களை கூற வந்த சமூக அமைப்புகளும் சாதி வடிவைப் பெறத் தொடங்கின. சமத்துவத்துக்காகவும் விடுதலைக்காகவும் பக்தி நெறிகளை ஏற்றுக்கொண்ட வீர சைவர்கள் (கர்நாடகத்தில் தோன்றியவர்கள்) கடைசியில் தனியொரு சாதியாக அமைந்து போயினர். கொள்வினை, கொடுப்பினை முதலியவற்றைத் தமக்கிடையே மட்டுமே செய்து கொண்டனர். அகமண முறையை அனுசரித்து தமது சாதி அடையாளத்தை நிலைநிறுத்திக் கொண்டனர். கபீர்தாசர் வழிவந்த சத்நாமிகளும் எதிர் மரபாகத் தொடங்கி இன்று தனி ஒரு சாதியாக வாழ்கின்றனர்.
குஜராத்துக்கு அருகிலுள்ள சிந்த் பகுதியில் வாழும்ஜாட்வகுப்பினர் 8ம் நூற்றாண்டில்சண்டாளர்களாகக் கருதப்பட்டனர். இப்பகுதியை பின்னாட்களில் ஆளவந்த முகமது காஸிம் போன்ற இஸ்லாமிய அரசர்கள் ஜாட் மக்களைத் தாழ்ந்த நிலையிலேயே வைத்திருந்தனர். ஆனால் 11ம் நூற்றாண்டில் ஜாட்டுகள் பஞ்சாப், ஹரியானா நோக்கி இடம் பெயரத் தொடங்கியதும் அவர்களது தலைவிதியும் மாறியது. 17ம் நூற்றாண்டு வாக்கில் அவர்கள் மதிப்பும் மாண்புமுடைய குடியானவ சாதியாக உருமாறியிருந்தனர். அதே நூற்றாண்டில் ஜாட் வகுப்பாரில் சிலர் மேற்கொண்டு செயல்படுத்திய கிளர்ச்சிப் போராட்டத்தின் விளைவாக அவர்கள் தங்களைப் போராளிகளாக உணர்ந்தனர். தாம் ராஜபுத்திரர்களுக்கு இணையானவர் என்று பெருமை பேசத் தொடங்கினர்.
சிவாஜி, தன்னை சத்திரியனாகக் காட்டிக்கொள்ள உத்தரப் பிரதேசத்திலிருந்து சில பார்ப்பனர்களைத் தருவித்து அவர்களது ஆசியையும், அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டார். மராத்தியப் பார்ப்பனர்கள் அவனுக்கு வழங்க மறுத்த தகுதியை இவ்வாறு அவன் பெற்றுக் கொண்டான்.
மராத்தியத்தில் தையல் தொழில் புரியும் சாதியில் சிலர் சாயம் வெளுக்கும், தோய்க்கும் பணியை மேற்கொண்டபோது வேறொரு சாதியாக உருமாறினார்கள். சில சமயங்களில் குறிப்பிட்ட சாதியைச் சேர்ந்தவர்கள் அச்சாதிக்குரிய பழக்க வழக்கங்களை அனுசரிக்காதபோதுகீழ்நிலைக்குத் தள்ளப்பட்டுகீழ் சாதியான சம்பவங்களும் உண்டு. ராஜஸ்தானைச் சேர்ந்த மால்வா பகுதியில் ராஜபுத்திர வகுப்பார் விதவைகளை மறுமணம் புரிய அனுமதிப்பதில்லை. அவ்வகுப்பைச் சேர்ந்த ஒருசில குடும்பங்களில் இவ்வாறு விதவை மணங்கள் நிகழ்ந்தபோது அவர்கள் சாதியிலிருந்து நீக்கப்பட்டனர். இவ்வாறு பிரிந்து மால்வா ராஜபுத்திரர்கள் இரு சாதிகளாகப் பிரிந்தனர்.
நாடு முழுமைக்கும் சமணம், பௌத்தம், ஆசிவகம், சைவம், வைணவம் ஆகிய வைதிக சமயங்களின் தொகைக்கேற்ப வருண வேற்றுமையும், சாதிப் பிரிவுகளும் வலுப்பெற்று வளர்ந்தன. ஒவ்வொரு பெருங் கோயிலைப்பற்றியும், ஊர்ப்புராணங்கள் தோன்றின. மூர்த்தி, தலம், தீர்த்தம் என்னும் மூன்று பெருமைகளுடன் இந்திரன் சாபம் இங்கு தீர்ந்தது, சந்திரன் சாபம் அங்கு தீர்ந்தது என்னும்  கதைகளும் அந்தக் கோயிலுக்கு வந்து பயன்பெற்ற முனிவர்கள், அரசர்கள், தேவர்கள் முதலியவர்களுடன் குறிப்பிட்ட சாதி மக்களையும், தெய்வ சம்பந்தம் உடையவர்களாக அப்புராணங்கள் சித்தரித்தன.
இதனால் பல சாதியர்களும் தங்களை உயர்ந்த சாதியினராகக் காட்டிக் கொள்ளத் தங்களை மேலான தெய்வங்களுடன் சம்பந்தப்படுத்தும் கதைகளைப் புனைந்தனர். இதனால் சாதி எண்ணிக்கை பெருகத் தொடங்கியது. இந்த நிலையில் பட்டினவர், செம்படவர், பரவர், வன்னியர் முதலியோர் பற்றிய புராணக் கதைகளும் பெருகின.

சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய நாட்டை ஆங்கிலேயர் ஆண்டு கொண்டிருந்தபோது எட்கர் தர்ஸ்டன் தென்னிந்தியச் சாதிகளும் குலங்களும் என்னும் தலைப்பிட்ட ஆங்கிலப் பெருநூலை அரசிடம் ஒப்படைத்தார். அந்த ஆய்வறிக்கையில் ஒவ்வொரு சாதியினரும், குலத்தவரும் தம்மைத் தெய்வத்தோடு தொடர்பு கொண்டவர் என்று கூறியதை குறிப்பிட்டிருந்தார்.
1910ல் அரசு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தியபோது ஒவ்வொரு சாதியரும் தங்கள் கோத்திரங்களைக் குறிப்பிட வேண்டும் என்று கூறியது. அப்பொழுதுதான் ஒவ்வொரு சாதியினரும் தம்மை இந்திரன் குலமென்றும், சந்திரன் குலம் என்றும், அக்கினிக் குலம் என்றும், சூரியன் குலம் என்றும் பெருமையாகக் கூறிக் கொள்ளத் தொடங்கினர்.
கள்ளர், மறவர், அகம்படியார் தம்மை இந்திர குலம் என்று கூறிக் கொண்டனர். கல் தச்சர், பொன் வேலை செய்யும் ஆசாரிகள் தம்மை விசுவகர்மா பிராமணர்கள் என்று கூறிக் கொண்டனர். நாடார், வன்னியர் தம்மை சத்திரியர்என்றும்பள்ளர்தம்மை தேவேந்திரகுல வேளாளர் என்றும் கூறிக் கொண்டனர்.
இதனால் சோழப் பேரரசு காலத்தில் மேற்சாதியினர் (வலங்கையினர்) 98 பிரிவினராகவும், கீழ்ச்சாதியினர் (இடங்கையினர்) 98 பிரிவினராகவும் இருந்த சாதிப்பிரிவு 1901ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பில் 2378 சாதிகளாகப் பெருகின. 1955ம் ஆண்டுக் கணக்கெடுப்பில் பின்தங்கிய வகுப்புக்கான குழு (பேக்வர்ட் க்ளாஸ் கமிஷன்) பின் தங்கிய சாதிகள் மட்டும் 2399 என்று கணக்கிட்டது. அப்படியென்றால் முன்னேறிய சாதிகள் (ஃபார்வர்ட் க்ளாஸ்)
எத்தனை? தாழ்த்தப்பட்ட சாதிகள் எத்தனை? இவற்றைக் கணக்கிட்டால் தமிழ்நாட்டில் சாதிப்பிரிவுகள் மட்டும் நாலாயிரத்தை நெருங்குமா? தாண்டுமா?
ஆங்கிலேயர் ஆட்சியில் தங்களை உயர்ந்த குலத்தார் என்று கூறிக்கொண்டவர்கள், நாடு விடுதலைப் பெற்றபின் தங்களைத் தாழ்த்தப்பட்டோர், பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று கோரிக்கை வைக்கத் தொடங்கி விட்டனர்.
0
மனிதர்களைப் பற்பல சாதிகளாகப் பாகுபடுத்தும் பழக்கம் வருணாசிரமம் என்னும் சதுர்வண முறை நம் துணைக்கண்டத்தை ஆக்கிரமித்து நம் சமூக போராட்டங்கள் அனைத்துக்கும்சிப்பாய்க் கலகத்திலிருந்து அயோத்தி காலம் வரை காரணமாக இருந்திருக்கிறது.
மருத்துவ நோக்கில் சாதிகளைப் பிரிக்க வேண்டுமென்றால் ரத்த க்ரூப் ,பி, பாஸிட்டிவ், நெகட்டிவ் என்றுதான் பிரிக்க முடியும். ரத்த தானம் செய்யும்போது பொருத்தமான ரத்தம் தானா? என்று பார்த்துக் கொடுக்க வேண்டும். அவ்வளவுதான் மருத்துவத்தின் சாதி.
மானுடவியலில் மனித சாதியை ஆப்பிரிக்கன், ஏசியன், ஆஸ்திரேலியன், நியூ கினியன், காகேசியன் என்று ஐந்து வகைகளில் அடக்கிவிடுகிறார்கள். நாமெல்லோரும் ஆசிய வகை.
இந்த வகைகளிடையே சரும நிறம், கண்களின் அளவு, அமைப்பு, தலைமயிர் சுருட்டை போன்ற வெளித் தோற்றங்களில் வேறுபாடுகள் தெரிகின்றன. ஆனால் உள்ளுறுப்புகளின் அமைப்பில் வித்தியாசம் இல்லை. ஓர் ஆப்பிரிக்கனின் இதயத்தை ஒரு ஆசியனுக்கு வைக்க முடியும்.
ஆசியனின் சிறுநீரகத்தை ஒரு காகேசியன் ஏற்கலாம். இறைச்சித் தோல் எலும்பிலும் இலக்கமிட்டிருக்குதோ என்று சிவவாக்கியர் கேட்டதற்கு பதில்இல்லைஎன்பதே.
நவீன மனிதன் எப்போது உண்டானான் என்பது பற்றிச் சுவாரஸ்யமான சர்ச்சைகள் நிகழ்ந்து கொண்டிருக்கின்றன. 1987ம் ஆண்டு அமெரிக்க பெர்கல்லி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அலன் வில்ஸன் என்பவர் நேச்சர் இதழில் எழுதிய ஒரு கட்டுரையில் ஒரு புதிய சித்தாந்தம் கொண்டு வந்தார்.
நம் முன்னோர்கள்நியண்டர்தால்என்னும் இனமல்ல. நவீன மனிதன் சுமார் ஒரு லட்சத்திலிருந்து ஒரு லட்சத்து நாற்பதாயிரம் வருடங்களுக்கு முன் ஒரு ஆப்பிரிக்கக் குழுவிலிருந்து தோன்றினான். இன்றைய மனித சமுதாயம் அத்தனை பேரும் அந்த ஆப்பிரிக்கக் குழுவிலிருந்து தோன்றியவர்கள்தான்என்று ஆதாரம் காட்டி எழுதியிருக்கிறார் வில்ஸன். இதற்காக அவர் பயன்படுத்திய அறிவியல் வளர்ச்சி முறை மாலிக்யுலர் பயாலஜி என்னும் இயலைச் சார்ந்தது.
இந்த ஆய்வின்படி அம்மா, பாட்டி, கொள்ளுப்பாட்டி, எள்ளுப்பாட்டி, என்று தாய் வழியிலேயே வம்சாவளியைப் பின்னால் தள்ளிக் கணக்கிட முடிந்தது. அவ்வாறு கணக்கிட்டால் நாம் எல்லோரும் ஒரு லட்சத்து சொச்சம் வருடங்களுக்கு முன் ஆப்பிரிக்காவில் வாழ்ந்த ஒரே பெண்மணியின் வாரிசுகள். உலகில் உயிர் வாழும் அத்தனை மனிதர்களும் இந்த மகாமகா பாட்டியிடமிருந்து மைட்டோ காண்ட்ரியா பெற்றவர்கள் என்ற ஒரு குண்டைத் தூக்கிப் போட்டார். அந்தப் பெண்மணிக்குமைட்டோ காண்ட்ரியல் ஈவ்என்றும் பெயரிட்டார்.
பைபிளின் ஏவாள் இந்த மாதிரி இருக்க விரும்பவில்லை. இந்த ஒரே தாய் சித்தாந்தத்துக்கு எதிராக அவர்கள் மற்றொரு சித்தாந்தம் சொல்கிறார்கள். அதுநோவாவின் படகுசித்தாந்தம். இதன்படி ஆப்பிரிக்காவிலிருந்து மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக மற்ற பகுதியிலிருந்து வந்த நவீன மானிடர்களால் இடம் பெயர்க்கப்பட்டனர். பிறகு  ஐரோப்பா, ஆப்பிரிக்கா, ஆசியா கண்டங்களில் அவர்கள் பரவினார்கள் என்று சொல்கிறார்கள். ஆனால் ஆப்பிரிக்க ஏவாள் சித்தாந்தம் பலரை வசீகரித்துள்ளது. அதன் சமூகவியல் அர்த்தங்கள் மிக மிக ஆழமானவை. மனித இனத்தில் எல்லோரும் ஒரே தாயிடமிருந்து ஜனித்தவர்கள் ஆவார்கள்.
ஆராய்ச்சிகளும், மருத்துவ உண்மைகளும் என்ன சொன்னாலும் சாதி பிடியிலிருந்து இறங்கி சமூக தளத்தில் ஒன்றாக இருக்க இங்கு யாரும் தயாராக இல்லை என்பதே உண்மை.

0000000000000000000000000000000000000000000
பறையர்கள் / அத்தியாயம் 4
தென்னிந்தியாவில் குறிப்பாகத் தமிழகத்தில் சாதிகள் மிகவும் வலிமையுடன் இருப்பதற்கு அடிப்படையாக அமைந்தவை வடநாட்டில் ஏற்பட்ட தொடர்ந்த படையெடுப்புகள்தாம். வடமேற்கு எல்லைப்புற மாநிலங்களின் அதாவது சிந்து, பஞ்சாப் பகுதிகளின் வழியாக நடந்த படையெடுப்புகளால் இந்தியாவில் நிலவி வந்த வர்ணப்பாகுபாடு சிதைந்தது. பார்ப்பனர்களின் வேள்விப் பண்பாடும் சமூகத் தலைமையும் கேள்விக்குட்படுத்தப்பட்டன. வெளிநாட்டுப் படைவீரர்கள் இந்தியப் பெண்களோடு கொண்ட மண உறவுகளும் புதிய சமூகம் உருவாகக் காரணங்களாயின.
வெளிநாட்டுப் படையெடுப்புகளால் ஏற்பட்ட சமூகமாற்றம் ஒரு புறமும் கி.மு. ஆறாம் நூற்றாண்டளவில் இந்தியாவில் தோன்றிய அறிவுப்புரட்சி மறுபுறமுகமாகப் பார்ப்பனிய மேலாண்மையை அலைக்கழித்தன. இந்த அறிவுப் புரட்சிக்குப் பெரிதும் காரணமாக இருந்தவர் கவுதம புத்தர். இவர் தோற்றுவித்த பௌத்த சமயம், பார்ப்பனியத்தின் அனைத்து முனைகளையும் மழுங்கடித்தது. பார்ப்பனர்களின் அறிவுத்துறை வளர்ச்சிக்கு அடிப்படையாக அமைந்ததும் வேதக் கல்வியின் மையமாக விளங்கியதுமான தட்சசீலம் வெளிநாட்டுப் படையெடுப்புகளாலும் பண்பாட்டுத் தாக்குதல்களாலும் சிதைவடைந்தது.
இதனால் பார்ப்பனர்கள் தங்களின் பாதுகாப்புக்காக நல்லதொரு புகலிடத்தைத் தேட வேண்டிய நெருக்கடிக்கு உள்ளாயினர். இவற்றைத் தொடர்ந்து இஸ்லாமியரின் படையெடுப்புகள் பார்ப்பனியத்தின் அடிப்படைகளைத் தகர்க்கத் தொடங்கின. ஆசீவகம், உலகாயதம், பௌத்தம் ஆகிய மனித நேயக் கோட்பாடுகளை வன்முறையில் சிதைத்தொழித்த பார்ப்பனியத்தை இஸ்லாமும் வன்முறையில் சந்தித்தது. அத்த்துடன் பார்ப்பனியம் கையாண்ட வஞ்சகத் தன்மைக்கு மாறாக இஸ்லாம் பின்பற்றிய சகோதரத்தன்மைஅனைவரையும் சமமாக நடத்திய சமத்துவம்மக்களிடையே இஸ்லாத்துக்கு நல்லதொரு செல்வாக்கு ஏற்படவும் வழி வகுத்தது.
இதனால் பல்வேறு சிக்கல்களுக்கு உள்ளான பார்ப்பனர்களின் முழுக்கவனமும் தென்னாட்டுப் பக்கம் திரும்பியது. தென்னாடு வந்த பார்ப்பனர்களுக்கு குப்தப் பேரரசு, பல்லவப் பேரரசு இவற்றை அடுத்து வந்த பிற்காலப் பாண்டிய சோழப் பேரரசுகள் ஆகிய அனைத்தும் பார்ப்பனியத்தின் காவல் அரண்களாகத் திகழ்ந்தன. இவ்வாறு தென்னகம் வந்து குடியேறிய பார்ப்பனர்கள் சிதறிக் கிடந்தனர். அவர்களை, சிதறிக் கிடந்த பார்ப்பனியத்தை ஒரு கட்டுக்குள் ஒன்றிணைத்தவர் ஆதிசங்கரர் ஆவார்.

இந்த ஆதிசங்கரர் மனுதர்மத்தை எழுதிய மனுவைவிடசூத்திரனைஇழிவுபடுத்தியவர் ஆவார். சூத்திரன் ஒருவன் வேதம் படித்துவிட்டால் அவனை நெஞ்சைப் பிளப்பது, நாவை அறுப்பது; வேதத்தைக் கேட்டால் காதில் ஈயத்தைக் காய்ச்சி ஊற்றுவது, கண்ணைத் தோண்டுவது போன்ற செயல்களைச் செய்ய அறிவுரை வழங்கியவர்தான் ஆதிசங்கரர் ஆவார். சங்கராச்சாரியார் இப்படி சூத்திரர்களைத் துன்புறுத்தி அடக்குவதற்கு எடுத்துக் கொண்ட சான்றுகள் குப்த அரசர்கள் காலத்தியகௌதம சூத்திரம்முதலிய நூல்களில் இருக்கின்றன. அதாவது சமுத்திர குப்தனுடைய காலத்தில் (கி.பி. நான்காம் நூற்றாண்டில்) ஆரம்பித்து சங்கராச்சாரியாரின் காலம் (கி.பி. 9வது நூற்றாண்டின் ஆரம்பம்) வரைக்கும் நம்முடைய பார்ப்பன முன்னோர்கள் சூத்திரர்களை அமுக்கி வைத்துத் தமது ஆதிக்கத்தை நிலை நிறுத்த இடைவிடாமல் முயன்று வந்தவர்கள் என்று தெரிகிறது.
0
இந்தியாவில் தொன்று தொட்டு சாதிக் கொடுமையும், சமயச் சண்டைகளும் நடந்துகொண்டுதான் இருக்கின்றன. அவ்வப்போது அறிவுடையோர், சாதிக் கொடுமையையும், சமய ஊழல்களையும் ஒழிக்க வேண்டுமென்று சொல்லியும் எழுதியும் வந்திருக்கிறார்கள். எழுதிக் கொண்டும் இருக்கிறார்கள். ஆனால் அவர்களை வைதீகர்கள் தொடர்ந்து எதிர்த்து வருகிறார்கள். இந்த வைதீகர்கள் சாதிக்கு ஆதாரமாகக் காட்டுவது மத நூல்களையே. மதநூல்களில் அந்தந்தக் காலத்தில் இருந்த பழக்கவழக்கங்களே சொல்லப்பட்டு இருந்தாலும் அதற்கு மிகுந்த சிறப்பை ஏற்றி வைத்திருக்கிறார்கள். மத நூல்கள் யாவும் கடவுள் தன்மை பொருந்தியதாகவும், கடவுளும் அதன் அவதாரங்களாகிய கடவுள்களும் நேரில் வந்து உபதேசித்ததாகவும் சொல்லுகிறார்கள்.
வேதத்திலும், உபநிடதங்களிலும், இதிகாசங்களிலும், ஸ்மிருதிகளிலும், இன்னும் மற்ற மத நூல்களிலும் சாதியைப் பற்றி சொல்லி இருப்பதாலும், சாதி நாட்டில் தொன்று தொட்டே இருந்ததாலும், அதனை விடாது கைப்பற்றி ஒழுகல் வேண்டுமென்பது வைதீகக் கொள்கை.
ஆய்வாளர்கள் கண்டறிந்த விஷயங்கள் இவை. மிகப் பழைய நூலாக இருக்கும் வேதத்தின் முதல் ஒன்பது மண்டிலங்களிலும் சாதி வேற்றுமையைப் பற்றிய குறிப்பு ஒன்றுமே காணப்படவில்லை. பிராமணன் என்னும் சொல் வேள்வி வேட்கும் முனிவனையும், பதிகங்கள் பாடும் புலவனையும் குறிக்கின்றனவே தவிர, பார்ப்பன வகுப்பினைக் குறிக்கவில்லை. ஏனைய மூன்று வகுப்பினரின் பெயர்களான சத்திரியன், வைசியன், சூத்திரன் என்னும் சொற்களும்கூட அந்த ஒன்பது மண்டிலங்களிலும் காணப்படவில்லை. இதனால் அவை எழுதப்பட்ட காலங்களில் மக்கள் எல்லோரும் ஒரே வகுப்பினராக இருந்தனர், நால்வேறு வகுப்பினராகப் பிரிந்திரிக்கவில்லை என்பது புலனாகும்.
இருக்கு வேதத்தின் (ரிக் வேதம்) பத்தாம் மண்டிலத்திலுள்ள புருஷ சூக்தம் நால்வகை மக்கள் பிரிவை உணர்த்துகிறது. ஆனால் அதிலும், இந்த நான்கு பிரிவினருக்குள் உயர்வு, தாழ்வு இல்லாமல் வாழ்க்கைக்கு முதன்மையாக வேண்டப்படும் நால் வகைத் தொழில்களைச் செய்து கொண்டு உண்ணல் கலத்தல்களில் வேறுபாடின்றி ஒருமித்து வாழ்ந்து வந்ததாகவே சொல்லப்படுகிறது. மேலும், ரிக், யஜுர், சாமம் உள்ளிட்ட மூன்று வேதங்கள் இயற்றப்பட்ட காலங்களிலும் மக்கள் பாகுபாடு இல்லை என்று சொல்லலாம்.
சுக்கில யஜுர் வேதத்தின் முப்பதாம் இயலில் பல்வேறு தொழில்களைச் செய்யும் பல்வேறு மக்கள் கூட்டத்தின் பெயர்கள் மட்டுமே காணக்கிடைக்கின்றன. சாதி வேறுபாடுகளும், உயர்வு தாழ்வுகளும் பேசப்படவில்லை. வேத காலத்தில் சாதி வேற்றுமையின் பொருட்டு பூணூல் அணியும் வழக்கம் காணப்படவில்லை. அக்காலத்தில் கடவுள் நம்பிக்கை அதிகமாக இருந்ததால், கடவுளைத் தொழிலில் புகுத்திருப்போர் தொழிலில் புகாதார் தம்மை அணுகாமல் விலகிப் போவதற்கு ஓர் அடையாளமாக அதனை அத்தொழில் இயற்றும் நேரங்களில் மட்டும் அணிந்ததாகச் சொல்லப்பட்டிருக்கிறது.
புராணங்கள், இதிகாசங்கள், பிற்பட்ட உபநிடதங்கள் தோன்றிய காலத்திலேதான் பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்னும் நான்கு வகுப்புகள் பிரிந்தன. இக்கால அளவுகளில் சூத்திரன் சமையல் செய்த உணவைப் பார்ப்பனன் அருந்தும் முறை பழைய கற்ப சூத்திரங்களில் சொல்லப்பட்டிருக்கிறது. வாயு புராணத்தில் கிருத யுகத்தில் சாதிகள் இல்லை என்றும் பிறகு தொழில்களுக்கு ஏற்ப மக்கள் நான்காகப் பிரிந்தார்களென்றும் சொல்லப்பட்டிருக்கிறது. வைதீகர்கள் ஐந்தாம் வேதமாகக் கொண்டுள்ள மகாபாரதம் சாந்தி பருவத்தில் மேற்கூறிய நால்வகை சாதியாரில் ஒழுக்கத்தால் மிக்கவரே உயர்ந்த சாதியாரெனவும், ஒழுக்கமில்லாதவரே தாழ்ந்த சாதியாரெனவும் சொல்லப்பட்டிருக்கிறது. அக்காலங்களில் உண்மை பேசுதலே மிகச் சிறந்த ஒழுக்கமாகவும், அதனையுடையோரே பிராமணராகவும் கருதப்பட்டனர்.
0
இந்தியாவில், ஒவ்வொரு சாதியும் தன்னுடைய இருப்பை உணர்ந்தே இருக்கிறது. அதன் இருத்தல் தத்துவமானது முதலும் முடிவுமாக தன்னை காத்துக் கொள்வதேயாகும். சாதிகள் ஒரு கூட்டமைப்பாகக் கூட ஆகவில்லை. இந்துமுஸ்லிம் கலவரம் ஏற்படும் நேரங்களில் தவிர்த்த மற்ற நேரங்களில், மற்ற சாதிகளோடு தம் சாதிக்கு உறவு உண்டு என்று எந்த சாதியினரும் எண்ணுவதில்லை. மற்ற நேரங்களில் எல்லாம், ஒவ்வொரு சாதியும் பிற சாதிகளில் இருந்து தன்னைத் தனிமைப்படுத்திக் கொள்ளவும், வேறுபடுத்திக் காட்டிக் கொள்ளவுமே முயல்கிறது.
சமூகவியலாளர் கூறும் குழு உணர்வு, இந்துக்களிடம் அறவே இல்லாத ஒன்று. நாம் அனைவரும் இந்துக்களே என்னும் உணர்வு அவர்களிடம் இல்லை. ஒவ்வொரு இந்துவிடமும் சாதிய உணர்வுதான் இருக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்துக்களை ஒரு சமூகமாகவோ, தேசமாகவோ கொள்ள முயலவில்லை. இந்தியர்கள் ஒரே தேசத்தவராக இல்லை. அவர்கள் தமக்கென ஒரே சீரான அடையாளத்தைப் பெறாத கும்பலாகவே உள்ளனர். ஆனால் இந்தியர்கள் பலர், நாட்டுப்பற்று காரணமாக இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்கள்.
நாடுகள் எப்படி தம் சுயநலன் கருதி தனித்து வாழ முற்படுகின்றனவோ, அது போலவே பல்வேறு சாதிகளும் தன்னலங்கருதி தமக்குள் உறவின்றி தனித்து வாழ முற்படுகின்றன. இந்தத் தன்மைதான் சாதிகளிடம் உள்ள சமூக விரோத மனப்பான்மையாக இருக்கிறது. இந்தத் தன்னல மனப்பான்மை, அனைத்துச் சாதிகளிலும் இருக்கிறது. பார்ப்பனர் அல்லாதவருக்கு எதிராக தங்கள்சொந்த நலன்களைக்காத்துக் கொள்வதே பார்ப்பனர்களின் அக்கறையாக இருக்கிறது. அதுபோலவே, பார்ப்பனர்களுக்கு எதிராகத் தங்கள்சொந்த நலன்களைக் காத்துக் கொள்வதேபார்ப்பனர் அல்லாதோரின் அக்கறையாக இருக்கிறது. எனவே, இந்துக்கள் பல்வேறு சாதிகள் சேர்ந்த கதம்பமாக மட்டும் இருக்கவில்லை. தன் சொந்த நலன்களுக்காக மட்டுமே வாழும்பரஸ்பரம் போட்டி மனப்பான்மை கொண்ட கூட்டங்களாகவும் உள்ளனர்.
சாதியினால் இந்துக்களின் தர்ம நெறிகளுக்கு ஏற்பட்டுள்ள நிலைமையைப் பார்க்க பரிதாபமாக உள்ளது. பொது நலன் என்கிற உணர்ச்சியையே சாதி கொன்றுவிட்டது. உதவும் உணர்ச்சியையும் அது அழித்துவிட்டது. மக்களிடையே பொதுக் கருத்து ஏற்படுவதற்கும் வழியில்லாமல் இருக்கிறது. இந்து மதத்தவன்பொது மக்கள்என்று கருதுவது தன் சாதியினரையே; தன் சாதிக்கு மட்டுமே அவன் பொறுப்பாளியாக இருக்கிறான். தன் சாதிக்கு மட்டுமே அவன் விசுவாசம் உள்ளனவாக இருக்கிறான்.
நல்ல இயல்புகளைச் சாதி அடக்கி விடுகிறது. பொது ஒழுக்கம் என்பதாக அல்லாமல், இங்கு சாதி ஒழுக்கமே இருக்கிறது. தர்ம உணர்ச்சி இருக்கிறது. அது தம் சாதியினரோடு தொடங்கி, தம் சாதியினரோடு முடிந்து விடுகிறது. இரக்க உணர்ச்சி இருக்கிறது. அது மற்ற சாதி மனிதர்களிடம் காட்டப்படுவதில்லை. நல்லவரும் உயர்ந்தவருமான பிற சாதியைச் சேர்ந்த ஒருவரை இந்து அங்கீகரிப்பானா?
சாதி என்ற அடித்தளத்தின்மீது எதையுமே உங்களால் கட்டமுடியாது. ஒரு தேசத்தை உங்களால் உருவாக்க முடியாது. உயர்ந்த நெறிகளையும் உருவாக்க முடியாது. சாதியை அடிப்படையாக்கக் கொண்டு நீங்கள் உருவாக்கும் எல்லாமே உருக்குலைந்து போகும்.
000000000000000000000000000000
பறையர்கள் / அத்தியாயம் 5
இந்தியச் சமூகம் அடிப்படையிலேயே ஏற்றத்தாழ்வுகளைக் கொண்டுள்ளது. மேலை நாட்டைப் போல் வகுப்புச் சமூகமாக அமையாமல் இது ஒரு சாதிச் சமூகமாக அமைந்திருப்பதே ஏற்றத்தாழ்வுகளுக்கான அடிப்படை. சாதிகள் வருணங்களில் இருந்து தோன்றின. வருணங்கள் கடவுளின் படைப்பாகப் போற்றப்பட்டன. வேதங்களும் அவற்றின் விளக்க உரைகளாக அமைந்தஅற நூல்கள்எனப்பட்ட தரும சாத்திரங்களும் வருணநெறிகளை அரசியல் சட்டங்களாக்கின.
இந்துக்களின் வரலாற்றில் ஏதோவொரு கால நிலையில் புரோகித வர்க்கம் மற்ற திரட்சியில் இருந்து தன்னைத்தானே சமூக வகையில் விலக்கிக் கொண்டது. தன்னைத் தானே ஒரு சாதியாகவும் அது உருவாக்கிக் கொண்டது. சமுதாய உழைப்புப் பிரிவினை விதிப்படி ஏனைய வர்க்கங்கள் சில மிகப்பெரியனவாகவும் மற்றவை மிகச் சிறியனவாகவும் சிதறுண்டு போயின. இன்றைய எண்ணிலடங்கா எத்தனையோ சாதிகளை உருவாக்கியவை தொடக்கக் கருப்பைகளான வைசிய வர்க்கமும், சூத்திர வர்க்கமும் ஆகும் என்று அம்பேத்கர் தெளிவாகக் குறிப்பிட்டிருக்கிறார்.
இந்து என்பது தத்துவார்த்த அளவில் தாராளத் தன்மையுடையதும், சமூகப் பழக்க அளவில் கெடுபிடியான கட்டுத் திட்டங்கள் கொண்டதுமான ஒரு மதமாகும். இதனால்தான் நாத்திகம் உள்ளிட்ட பல்வேறு தத்துவங்களையும் இது தனது தத்துவமாக உள்ளடக்கி அறிவிக்கும் அதே வேளை, சாதியக் கட்டமைப்பில் மட்டும் கறாரான கட்டுத் திட்டங்களைக் கடைபிடிக்க வலியுறுத்துகிறது. இதனாலேயே இந்துக்கள் தங்கள் இருப்பைச் சாதிய வடிவிலேயே வெளிப்படுத்த வேண்டியவர்களாகவும் இருக்கிறார்கள்.
இந்த இந்துக்களும் உலகம் முழுக்க, இந்தியா முழுக்க வாழ்ந்தாலும் இவர்களும் மத அடிப்படையை வைத்து அடையாளம் காணப்படுவதில்லை. மாறாக தேசிய இனத்தை வைத்தே அடையாளம் காணப்படுகிறார்கள். எடுத்துக்காட்டாக, இந்தியாவில் வாழும் இந்துக்கள் தமிழர், தெலுங்கர், மலையாளி, கன்னடர், வங்காளி, குஜராத்தி என்றே அறியப்படுகிறார்களே யொழிய பொதுவில் இந்துக்கள் என்று அல்ல.

இன்றைய சமூகத்தில் இந்து மற்றும் இந்துத்துவத் தாக்கமுள்ள எந்த ஒரு மக்கள் பிரிவும் சாதியை வைத்தே அடையாளம் காணப்படுகிறது. மனிதனின் சாதிய அடையாளமே மிக முக்கியமானதாக அறியப்படுகிறது. மனிதன் பிறந்து பெயர் வைக்கும் முன்பே ஏன் பிறக்கும் முன் கருவிலேயே மனிதனின் சாதி தீர்மானிக்கப்பட்டு விடுகிறது. இப்படி அகமண முறையில் கெட்டித்தட்டிப் போயும், இறுக்கமடைந்தும் மாற்றமுடியாததாகவும், நிலவும் சாதியக் கட்டமைப்புக்குள் மனிதனுக்கு சுதந்தரம், சனநாயகம், சமத்துவம் எதுவும் இல்லை.