10/2

பறையர்கள் / அத்தியாயம் 1
சாதி என்பது தமிழ்ச் சொல், வடமொழியில் ஜாதி என்றானது. சாதி என்னும் தமிழ் சொல்லுக்கு இன்றைக்கு நாம் கொண்டுள்ள பொருள் சங்க காலத்தில் இல்லை.
தாவரவியல், விலங்கியல் ஆகிய துறைகளில் ஒரே வகையான இனத்தைச் சார்ந்த செடியினம் அல்லது உயிரினம் ஆகியவற்றைக் குறிக்க Family என்ற சொல்லைப் பயன்படுத்துவர். இந்த ஆங்கிலச் சொல்லுக்குக் குடும்பம், குடும்ப உறுப்பினர், தொகுதி, பொதுப்பண்புகளைக் கொண்ட தனிச் சிறப்புக் குழு, இனம், நேசத் தொடர்பு கொண்ட இனத்தொகுதி என்று பல்வேறு பொருள்கள் உண்டு. இதே அடிப்படையில் தான் சாதி என்ற சொல் தொல்காப்பியத்தில் பயன்படுத்தப்பட்டது.
நீர்வாழ் சாதியுள் நந்தும் நாகே’ (தொல்காப்பியம், பொருளதிகாரம், மரபியல்) என்பது நூற்பா. நீருள் வாழும் இனங்களில் நந்து என்பதும் நாகு என்பதும் பெண்பால் பெயர்பெறும் என்பது இதன் பொருள். இதைப் போன்றே மணிமேகலையிலும் ஒரு குறிப்பு வருகிறது.
பயிலொளி யொடுபொரு ளிடம்பழு தின்றிச்
சுட்ட றிதல்கவர் கோட றோன்றாது
கிட்டிய தேச நாம சாதி
குணக்கிரி யையி னறிவ தாகும்
இன்னோரிடத்தில் இப்படி வருகிறது.
சுட்டுணர் வைப்பிரத் தியக்க மெனச்சொலி
விட்டனர் நாம சாதிக்குணக் கிரியைகள்
இந்த இரு இடங்களிலும் வரும் சாதி என்ற சொல், வகை அல்லது பண்பு என்ற பொருளில்தான் ஆளப்பட்டுள்ளது.
ஆக, சங்க காலத்தில் சாதி என்னும் சொல் வழக்கில் இருந்தாலும் அது மனித இனத்தைப் பிறப்பின் அடிப்படையில் பிரித்து, தனிமைப்படுத்தியுள்ள இக்கால சாதி என்ற பொருளில் வழங்கப்படவில்லை என்பது உறுதி.
சாதி என்னும் சொல்லுக்கு நிகராக ஆங்கிலத்தில் வழங்கும் சொல் Caste என்பதாகும். இந்தச் சொல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதி தரும் விளக்கம் இது.
சாதி என்ற பொருளை உணர்த்தும் இச்சொல் ஸ்பானிஷ் மொழியில்தான் முதன் முதலில் தோன்றியது. பின்னர் இந்தியச் சமூகத்தில் நிலவும் மிகவும் இறுகிப்போன சமுதாய விதிகளைக் குறிக்கும் சொல்லாக இது 16ம் நூற்றாண்டில் போர்ச்சுகீசியரால் வழங்கப்பெற்றது.
இச்சாதி அமைப்பு (காஸ்ட் சிஸ்டம்) தனி மனிதர்களை அவர்களுடைய பிறப்பு, தொழில் ஆகியவற்றின் அடிப்படையில் வரிசைப்படுத்துகிறது. இவ்வாறு வரிசைப்படுத்தும் முறையும் அச்சமூக அமைப்பில் உள்ள திருமணம் மற்றும் சமூக உறவுகளால் (சோஷியல் இண்டர்கோர்ஸ்) பாதுகாக்கப் பெற்று, இந்து அல்லாத பிற ஆசியச் சமூகங்களிலும் இடம்பெற்று விட்டது.
இந்தியாவில் தொன்றுதொட்டு நிலவிய நால் வருணப் பாகுபாடே சாதிகள் தோற்றம் கொள்ளக் காரணமாயின என்ற கருத்து தவறானது. வேத காலத்துக்குப் பின்னர் தோன்றிய வணிகக் குழு, தொழில் குழு (கில்ட்) ஆகியவற்றின் விளைவே சாதியின் தோற்றத்துக்குக் காரணம். (The Oxford Reference Dictionary, பக்கம் 137).
சாதிகளின் தோற்றம் பற்றி அறிஞர்களிடையே இரண்டு வகையான கருத்துகள் நிலவுகின்றன. இந்தியச் சமுகம் பற்றி ஆராயும் மேலைநாட்டுஇந்தியவியல்அறிஞர்கள் (இன்டாலஜிஸ்ட்) சாதிகளின் தோற்றத்துக்கு ஆரியர்களோ அவர்களின் வேதங்களோ காரணமாக அமையவில்லை என்றும் ஆரியர் இந்தியாவுக்கு வந்து, சிந்துச் சமவெளியிலிருந்து கங்கைச் சமவெளிக்குப் பரவிய பின்னரே இந்தியாவில் சாதிகள் அரும்பத் தொடங்கின என்றும் கருதுகின்றனர்.
இந்தக் கருத்தின் அடிப்படையில் கொடுக்கப்பட்டதுதான் மேலே கண்ட சாதிகள் பற்றிய ஆக்ஸ்ஃபோர்ட் ஆங்கில அகராதியின் விளக்கம். இத்தகைய கருத்தை உருவாக்கிய அறிஞர்களுள் குறிப்பிடத்தக்கவர்கள் Dr. Muir, அமெரிக்க அறிஞரான Henrich Zimmer ஆகியோர்.
சாதிகளின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களின் நான்கு வேதங்களும் அவர்களால் உருவாக்கப்பட்ட உபநிடதங்களும் தரும சாத்திரங்களுமே அடிப்படை என்பதை ஏற்றுக்கொண்டவர்கள் மற்றொரு பிரிவினர். இவர்கள் பார்ப்பனர்களையும் அவர்களுடைய வேத வேள்விப் பண்பாடுகளையும் எதிர்த்தனர். சாதியின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களே காரணம் என்னும் கருத்தின் அடிப்படையில் அவர்களைக் கண்டித்தும் மறுத்தும் வந்துள்ளனர்.
இந்தியாவில் தோன்றிய அனைத்து மனித நலச் சிந்தனையாளர்களும் அதாவது வள்ளுவர், கபிலர் (சாங்கியக் கோட்பாட்டை நிறுவியவர்) புத்தர் முதல் தந்தை பெரியார், அம்பேத்கர், மகாத்மா ஜோதிபா ஃபூலே முதலான அனைவரும் இப்பிரிவைச் சார்ந்தோர் எனலாம். இந்தியாவில் நடந்த சாதி ஒழிப்புக்கான போராட்டங்கள் அனைத்தும் பார்ப்பன எதிர்ப்புப் போராட்டங்களாகவே அமைந்துள்ள வரலாற்று உண்மையும் சாதிகளின் தோற்றத்துக்குப் பார்ப்பனர்களே காரணம் என்பதை உறுதி செய்கிறது.
அம்பேத்கர் சாதிகளை ஆய்வு செய்து, ‘அகமணமே (endogamy) சாதிக்குரிய தனித் தன்மையான ஒரே இயல்பு ஆகும்’. அதாவது கலப்பு மணம் செய்து கொள்வதற்கான தடைகளிலிருந்துதான் சாதிகள் தோன்றுகின்றன என்று விளக்குகிறார். மேலும் :
1.    இந்திய மக்கள் ஒரு கலவையான உருவாக்கமாக இருந்தபோதிலும்கூட அவர்களிடைய ஓர் ஆழ்ந்த பண்பாட்டு ஒத்திசைவு உள்ளது.
2.    மிகப்பெரிய பண்பாட்டு அலகைத் தனித்தனிச் சிப்பங்களாக ஆக்குவதே சாதி.
3.    ஒரு சாதியிலிருந்து மற்றெல்லா சாதிகளும் உதயமாயின.
4.    பார்த்தொழுகுதல் (imitation) விலக்கி வைக்கப்படுவதாலும் வர்க்கங்கள் சாதிகளாயின.
என்றும் அம்பேத்கர் வகைப்படுத்துகிறார்.
தமிழ்நாட்டில் சாதிகளின் தோற்றமும், வளர்ச்சியும்என்ற தலைப்பில் ஆய்வு செய்த முனைவர் கே.ஆர்.அனுமந்தன் பின்வரும் காரணங்களே சாதிகளின் தோற்றத்துக்கு அடிப்படை என்கிறார்.
1.    அகமணம்தன் சொந்த சாதிக்குள்ளேயே மணம் செய்தல். அதன் வாயிலாகப் பிறசாதியுடன் மண உறவைத் தடுத்தல்.
2.    பிற சாதியினருடன் கலந்துண்ணத் தடை.
3.    பரம்பரைத் தொழில் (கற்பனை அல்லது உண்மை)
4.    தன் பரம்பரையின் தொடக்கம் குறித்த கோட்பாடு (தெய்வீகத்தன்மை அல்லது மனித மூலம்).
5.    புரோகித அமைப்பில் பார்ப்பனர்க்கு உயர்வும் சூத்திரர்க்கு தாழ்வும் கற்பித்த சமூக அமைப்பு.
6.    சாதி நீக்கம் (Ex-communication).
7.    சமயச் சடங்கின் புனிதம் கற்பித்தல். அத்துடன் தூய்மை அற்றவர் எனச் சிலரைச் சமய சடங்குகளிலிருந்து விலக்கி வைத்தல்.
தமிழ்ச் சமுதாயத்தில் ஐந்திணைகளிலும் இருந்த மக்கள் பெரும்பாலும் இனக்குழுவினராகவே இருந்திருப்பர். தொழில் அடிப்படையில் வேறுபட்ட இந்த இனக்குழுக்கள் பெரும்பாலும் அகமணக் குழுக்களே. அக்காலத்தில் சாதியோ, வர்ணாசிரமமோ இருந்திருக்காது.
நால்வருணம் பற்றிக் கூறும் தொல், பொருள், மரபியல் சூத்திரங்கள் (71-85) இடைச் செருகல் என்பதை அனைவரும் ஏற்கின்றனர்.
ஆரியர்களின் தாக்கம் தமிழ்நாட்டில் கி.மு. 4ம் நூற்றாண்டை ஒட்டியே மெதுவாகத் தொடங்கியிருக்கும். சமணர், புத்தர், பிராமண மதத்தினர் என்ற வரிசையில் இத்தாக்கம் இருந்திருக்கும். பிராமணர் தமது வருணாசிரமக் கொள்கையைத் தன்னல நோக்குடன், திராவிட இனக்குழுச் சமூகத்தை வேதியியல் மாற்றம் அடையச் செய்ய சாதிகளையும் சாதி வேற்றுமைகளையும், தீண்டாமைக் கொடுமைகளையும் உருவாக்கினர். தமிழகத்தில் இவ்வகையில் ஆரியத்தாக்கம் ஏற்பட்ட காலம் கி.பி. 600க்கும் பின்னர்தான் இருக்க வேண்டும் என்கிறார் பி.டி.சீனிவாச ஐயங்கார்.
0
புத்தர் வாழ்ந்த காலத்தில் சாதிவருண அடிப்படையிலான சமூக உறவுகள் முழுமையடையாத நிலையில் உற்பத்தி உறவுகள்தான் சமூகத் தகுதியை தீர்மானித்தன. நிலத்தின்மீது ஆளுகை செலுத்தியவர்கள்கஹபதிகள் என்று அறியப்பட்டனர். அவர்களுக்கென சாதி அடையாளமோ வருண அடையாளமோ இருந்ததாகத் தெரியவில்லை. அதே சமயம் நிலமற்ற உழைப்பாளிகளும், ஏவல் தொழில் புரிந்தவர்களும் குறிப்பிட்ட வருண, சாதி அடையாளத்தைப் பெற்றிருக்கவில்லை. இவர்கள்தாசர்கள்என்றும், ‘கம்ம (கரும)க்காரர்கள்என்றுமே பௌத்த நூல்கள் குறிப்பிடுகின்றன. உணவையும் ஊதியத்தையும் எதிர்பார்த்தே இவர்கள் உழைத்ததாகத் தெரிகிறது. இக்காலகட்டத்தில் செல்வர்வரியவர் என்ற அடிப்படையில் சமுதாய உறவுகள் முரண்பட்டிருந்தனவே ஒழிய மேல்கீழ் வரிசையில் நிறுத்தப்பட்ட சாதி நிலைகளின் அடிப்படையில் அல்ல.
கி.பி. 500-1000 ஆண்டுகளுக்கு இடைப்பட்ட காலகட்டத்தில் தமிழ்ச் சமுதாயத்தில் விவசாய விரிவாக்கம் ஏற்றத்தாழ்வுகளை ஏற்படுத்தியது. மேலும், ஏற்றத்தாழ்வுகள் சாதியப் பாகுபாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டது. காவேரி ஆற்றுப் பகுதியில்தான் சாதிப் படிநிலை அமைப்பு முதன் முதலில் உருத்திரட்டு பெற்றது. மூவேந்தர்களின் ஆட்சியில்தான் முழுமையாக ஏர்கொண்டு உழுதல் பரவலாக அறிமுகப்படுத்தப்பட்டது. குடும்பமும், குலக்குழுவும் நிலத்தில் பாடுபட்ட நிலைமை மாறி அடிமைகளையும், கூலிகளையும் கொண்டு விவசாய உற்பத்தி மேற்கொள்ளப்பட்டது. முடி மன்னர்கள் பார்ப்பனர்களுக்கு மானியங்களாக வழங்கிய நிலங்களில்தான் இந்த அடிமை முறை முதலில் கையாளப்பட்டது.
பார்ப்பனர்களே ஆண்டைகளாக விளங்கியதுடன், நாட்டில் அவர்கள் மேலாண்மையும் செலுத்தி வந்தனர். சமுதாயத்தில் நெறி வகுப்பவர்களாக நிதி, நியாயம் முதலியவற்றை வரையறுத்துத் தீர்மானிப்பவராக தம்மை நிலை நாட்டிக் கொண்டு விவசாயக் கூலிகளையும், ஏனைய தொழில் பிரிவினரையும் சாதிகளாக அடையாளப்படுத்தி அச்சாதிகளை மேல்கீழ் வரிசையில் நிறுத்தி இன்றுள்ள சாதிப்படிநிலை அமைப்புக்கான வித்துகளை அன்றே அமைத்தனர். தீண்டாமை அன்றே அறிமுகப்படுத்தப்பட்டது.
கட்டாய உழைப்பாளிகளாக அடையாளப்படுத்தப்பட்ட சமுதாயப் பிரிவினர் அடிமைகளாக, கூலிகளாக, சேவைப் பணியாளர்களாக வாழ நிர்பந்திக்கப்பட்டனர். இவர்களுக்கென்று தனி வாழ்விடங்கள் ஒதுக்கப்பட்டன. இவர்கள் அசுத்தமானவர்கள்கீழானவர்கள் என்று கருதப்பட்டனர். இவர்களது உழைப்பைத் தொடர்ந்து சுரண்டுவதன் பொருட்டு ஏற்படுத்தப்பட்ட தீண்டாமையானது தூய்மையுடன் தொடர்புப்படுத்தப்பட்டது. தாழ்த்தப்பட்ட மக்கள் தொடர்ந்து அவ்வாறே நீடிப்பதற்கான வலுவான நியாயங்களை தீண்டாமை தொடர்பான கருத்தாடல்கள் வழங்கின.
சாதி அமைப்பானது, குறிப்பிட்ட தொழில் புரிவோரைக் குறிப்பிட்ட சாதியாக அடையாளப்படுத்தி அத்தொழிலை அந்தச் சாதியும், அதனை ஒத்த சாதிகளும் மட்டுமே புரிய வேண்டும் என்று சட்டம் வகுத்து, அச்சாதியில் பொருளாதார, சமுதாய அந்தஸ்தையும் நிர்ணயம் செய்தது.
குறிப்பிட்ட வருணத்தின் அல்லது சாதியின் தனித்தன்மையையும் அடையாளத்தையும், நிலைநிறுத்த சில சட்டங்களும் கட்டுப்பாடுகளும் வகுக்கப்பட்டன. இன்ன சாதியார் இன்ன தொழிலைத்தான் செய்யலாம்; இன்ன சாதியார் மட்டுமே நிலவுடையாளராக இருக்க முடியும்; இன்னார்தான் அரசாள முடியும், ஆன்மிக அறிவாளிகளாக இருக்க முடியும்; சில சாதிகள் தூய்மையானவை, வேறு சில தீட்டுப்பட்டவை என்ற ரீதியில் அக்கட்டுப்பாடுகளும், சட்டங்களும் அமைந்தன.
தமிழகத்தில் சங்க காலத்திலேயே பல குலங்கள், மக்கள் செய்து வந்த தொழிலுக்கு ஏற்பத் தோன்றியிருந்தன. அளவர், இடையர், இயவர், உமணர், உழவர், எயிணர், கடம்பர், கம்மியர், களமர், கிளைஞர், குயவர், குறவர், குறும்பர், கூத்தர், கொல்லர், கோசர், தச்சர், துடியர், தேர்ப்பாகர், துணையர், பரத்வர், பறையர், பாணர், புலையர், பொருநர், மழவர், வடவடுகர், வண்ணார், வணிகர், வேடர் எனப்பல குலங்கள் தோன்றியிருந்தன. ஆனால், இக்குலங்களுக்குள் உணவுக் கலப்போ, திருமணக்கலப்போ தடை செய்யப்படவில்லை. ஒவ்வொரு குலத்தினரும் தத்தம் தொழிலைச் செய்து வயிறு பிழைத்தனர். ஒவ்வொரு குலமும் தமிழ்ச் சமுதாயத்தில் விலக்க முடியாத ஓர் உறுப்பாகவே செயல்பட்டு வந்தது.

இனம், நிலம் ஆகிய வேறுபாடுகளால் இடர்பட்டுத் தடுமாறாத தமிழரின் சமூகம் காலப்போக்கில் பல சாதிகளாகப் பிரிந்தது. மக்களுக்குப் பிறப்பிலேயே உயர்வு தாழ்வுகள் கற்பிக்கப்பட்டன. பழந்தமிழகத்தில் திணைப் பிரிவுகளின் படியே வாழ்ந்து வந்த மக்கள் அந்த வாழ்க்கை முறைலிருந்து நழுவினர்.
-----------------------------------------------------------------------------------------------

பறையர்கள் / அத்தியாயம் 2
முல்லை நிலத்து இடையனும், குறிஞ்சி நிலைத்துக் குறவனும், மருத நிலத்து வேளாண் பெண்ணை மணக்க முடியாது. அதைப் போலவே மருத நிலத்து வேளாண் இளைஞன் ஒருவன் நெய்தல் நிலத்துப் பரதவப் பெண்ணை காதலித்தல் இழுக்காகக் கொள்ளப்பட்டது.
தமிழக வரலாற்றில் சங்ககாலம் ஒரு பொற்காலம் எனக் கருதப்படுகிறது. அப்போது மிகச் செல்வாக்காக இருந்ததாகக் கருதப்படும் நான்கு குடிகள் துடியன், பாணன், பறையன், கடம்பன் என்பவையாகும். இந்தக் குடிகளை விடச் சிறந்த குடிகள் வேறு இல என்று அவர்களுடைய தொழிலின் சிறப்பைப் பாராட்டி மாங்குடி கிழார் பாடியுள்ளார்.

பண்டைய காலத்தில் மனித இனம் சிறு சிறு குழுக்களாக அமைந்திருந்தது. உணவுக்கும் பஞ்சம் ஏற்பட்ட காலங்களில் மனித இனம் ஓரிடத்திலேயே நிலைத்து நிற்காமல் உணவு கிடைக்கும் பல்வேறு இடங்களை நோக்கி அலைந்து கொண்டிருந்தது. உணவுக்குரிய இடம் கண்டுபிடிக்கப்பட்டப் பின்னர் அவ்விடத்துக்கு வரும் புதிய குழுக்களின் ஊடுருவலைப் பிறிதொரு கூட்டம் தடுத்து நிறுத்தியது. இந்த உறவு, இதனடிப்படையில் நிலவிய பொதுமை உணர்வுப் பகிர்வு ஆகியன கூட்டங்கள் அல்லது குழுக்களாக இருந்த அமைப்புகளைக் குலக் குழுக்களாக மாற்றம் பெறச் செய்துள்ளன.
அதாவது, கூட்டங்கள் அல்லது குழுக்கள் ஒவ்வொன்றும் குலத் தலைமை, தனிக் குல மரபுச் சின்னம், பொது மண உறவில் தடை ஆகியவற்றின் மூலமாக ஒன்றையொன்று வேறுபடுத்திக் கொண்டன. குலக் குழுக்களிடம் காணப்பட்ட இத்தகைய சிறுசிறு வேறுபாடுகளையே சாதிப்பிரிவினைகள் தோன்றுவதற்குரிய அடிப்படையாக அமைத்துக் கொள்ளலாம். ஆதிகால மனிதன் அல்லது குழுக்கள் உட்கொண்ட உணவுப் பொருள்களே குழுக்களைப் பிரிக்கும் குலச் சின்னங்களாக அமைந்தன.
0
மூவேந்தர் ஆட்சிக்காலத்தில் படிநிலை சமூகம் அமைந்திருந்தது. ஆயர் அல்லது இடையரும், வேட்டுவர் அல்லது வேடரும் உழவருக்கு அடுத்த படியில் உள்ளவர்கள், பொற்கொல்லர், கருமான், தச்சர், குயவர், முதலிய கலைத் தொழிலாளர் ஆயர்களுக்கு அடுத்த படியிலுள்ளவர்கள். அவர்களுக்கு அடுத்தது, படையாச்சியர் அல்லது படைக்கலம் மேற்கொண்டவர்கள். வலையர் அல்லது மீன் தொழிலாளரும் புலையர் அல்லது தோட்டிகளும் கடைசிப் படியிலிருந்தார்கள்.

உயர் வகுப்பினர் தெருவில் சென்றபோது தாழ்வகுப்பினர் அவர்களுக்கு வழிவிட்டனர். பெருமகனைக் கண்ட புலையன் அல்லது தோட்டி வழிபடுபவன் போல இருகைகளையும் கூப்பித் தலைவணங்கினார்.
அடிமைத்தனம் தமிழரிடையே இருந்ததில்லை. தமிழரிடையேயுள்ள மேற்காட்டிய வகுப்பு முறை மெகஸ்தனிஸ் கண்டு தீட்டிய பண்டை மகதப்பேரரசிலுள்ள மக்கள் நிலையைப் பெரிதும் ஒத்துள்ளன.
மெகஸ்தனிஸ் குறித்துள்ளபடி மக்கள் தொகுதி ஏழு வகுப்புகளாகப் பிரிவுபட்டிருந்தது.
முதலாவதாக, அறிவர் வகுப்பு. இவர்கள் தொகையில் மிகமிகக் குறைவானவர்களே. தனிப்பட்ட மனிதர்களால் அவர்கள் வேள்விகளிலும் மற்றத் திருவினைகளிலும் ஈடுபடுத்தப்பட்டார்கள். அறிவர்கள் பொது மக்களுக்கு அந்த ஆண்டின் பஞ்சப்பருவங்கள், மழை, அரசியல் கோளாறுகள் ஆகியவை பற்றி அறிவுரை நல்கினர். இந்த அறிவர்கள் ஆடையற்றவர்களாகவே இருந்தார்கள்.
இரண்டாவதாக, உழவர் வகுப்பு. இந்த வகுப்பைச் சேர்ந்தவர்கள் தங்கள் நேரம் முழுவதையும் நிலம் பண்படுத்துவதிலேயே செலவிட்டனர். ஆயர்களும் வேடர்களும் மூன்றாம் வகுப்பினர். அவர்கள் தங்கள் கால்நடைகளைப் பேணியும், கூடாரங்களில் தங்கியும் நாடோடி வாழ்வு வாழ்ந்தனர்.
நான்காவது, தொழில் வகுப்பு. பொருள்கள் வாங்கி விற்றல், கூலிவேலை செய்தல் அவர்கள் வேலை. படைக்கலத் தொழிலாளரும், கவசத் தொழிலாளரும், எல்லா வகைப்பட்ட கலைத் தொழிலாளர்களும் இதில் அடங்குவர்.
போர் வீரர் ஐந்தாம் வகுப்பினர். அவர்கள் அரசன் செலவில் வாழ்ந்து வந்தனர். ஆறாவது வகுப்பு மேற்பார்வை செய்தது. நாட்டிலும் நகரிலும் நடப்பதை ஒற்றறிந்து அரசனுக்கோ, தண்டலாளருக்கோ அறிவிப்பது அவர்கள் கடமை.
ஏழாவது வகுப்பு தன்னாட்சியுடைய நகரங்களில் பொது ஆட்சிக்காரியங்களில் மன்னன் அல்லது தண்டலாளர்களுக்கு அறிவுரை கூறிய மன்றத்தாரைக் கொண்டது.
ஒரு வகுப்பிலிருந்து மற்றொரு வகுப்புக்கு மாறுவதற்கு அனுமதியில்லை. ஓர் உழவன் இடையனாகவோ அல்லது இடையர் வகுப்பைச் சேர்ந்தவர் கலைத்தொழில் வகுப்பிலிருந்து பெண்கொள்ளவோ முடியாது. அறிவர் வகுப்புக்கு மட்டும் இச்சட்டதிட்டம் முழுவிலக்களித்தது. அவர் எந்த வகுப்பினராகவும் இருக்கலாம். ஏனெனில் அவர் வாழ்வு எளிதான ஒன்றல்ல.
0
இன்று ஒவ்வொரு சாதியும் அகமண உட்சாதிகளாகப் பிரிந்து ஒவ்வொன்றுக்குள்ளும் கரை, கூட்டம், வகையரா, பரம்பரை, வம்சம், குலம் என்று சொல்லக்கூடிய பல புறமணக் குழுக்கள் உள்ளன.
இந்தியா முழுவதிலும் ஒவ்வொரு சாதியும் பல கால்வழிக் குழுக்களாகப் (வம்சம்) பிரிகின்றன. ரத்த உறவையும், சந்ததியின் தொடர்ச்சியையும் குறிக்கும் இக்குழுக்கள் குலம், கோத்திரம், கூட்டம், பரம்பரை, வகையரா, வம்சாவளி போன்ற பல சொற்களால் குறிக்கப்பட்டுகின்றன.
தமிழ்ச் சமூகத்துக்கு நேரிட்ட சாதி இன்னல்களைக் கண்டு பல அறிஞர்கள் அவ்வப்போது தமிழருக்கு அறிவுரைகள் வழங்கி வந்துள்ளனர்.
பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும், சிறப்பொவ்வா / செய்தொழில் வேற்றுமை யான் என்றார் திருவள்ளுவர். இது மக்கள் சமூகத்தில் வாழவேண்டிய முறைகளை வகுக்கும்
புறத்திணை இலக்கணமாகும். திருமூலர் ஒன்றே குலமும் ஒருவனே தேவனும் திருமந்திரம்) என்று கூறி மக்களைத் திருத்த முயன்றனர்.

ஏழாம் நூற்றாண்டில் வாழ்ந்திருந்த சைவ சமய குரவரான திருநாவுக்கரசர், ‘சாத்திரம் பல பேசும் சழக்கர்காள் / கோத்திரமும் குலமும் கொண்டு என்செய்வீர்?’ (தேவாரம்) என்று வினவுகிறார். ராமலிங்க அடிகளார், சமயம் குல முதல் சார்பெலாம் விடுத்த. அமயம் தோன்றிய அருட்பெருஞ்ஜோதி என்றும் சாதி குலமென்றும்ஓதுகின்ற பேயாட்டம் என்றும் சாதி வேறுபாடுகளை வன்மையாகக் கண்டிக்கிறார்.
0
ஆனால் யார் வந்து என்ன சொன்னாலும்சாதிஎன்ற மாய கௌரவத்தை இங்கு யாரும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை.
சாதிகளின் இருப்பு ஒருபுறம் இருந்தாலும் சாதிகளின் எண்ணிக்கை ஒவ்வொரு காலகட்டத்திலும் பெருகவே செய்தது. கி.பி. 52க்குப் பின் மலபாரில் வந்து குடியேறிய அராபியர்கள் தொடர்பால்மாப்பிள்ளைஎன்னும் சாதியினர் தமிழகத்தில் தோன்றினர். கி.பி. 6ம் நூற்றாண்டில் ஹர்ஷர் காலத்தில் சமூகத்துறையில் சாதிக் கட்டுப்பாடு, தீண்டாமை ஆகியவை வலுவாக மேற்கொள்ளப்பட்டன.

கி.பி. 7ம் நூற்றாண்டில் வர்த்தனர் ஆட்சிக்காலத்தில் சாதிகளின் எண்ணிக்கை மேலும் மேலும் வளர்ந்து வந்தது. பிறப்பால் சாதி தோன்றுகிறது என்னும் கருத்து வேரூன்றலாயிற்று. தொழில் அடிப்படையில் பிறந்திருக்கக்கூடிய சாதி, தொழில் மாறினாலும் மாறாத நிலையில் நிலைபெற்றது. இந்தியாவில் சுல்தான்களின் ஆட்சிக்காலத்தில், சிறுசிறு சாதிகளும் புது சிறு உட்சாதிகளும் தோன்றின. இக்காலக்கட்டத்தில் இந்து சமுதாயத்திலிருந்த சாதிகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போனது.
13ம் நூற்றாண்டில் மன்னன் இறைவனாகவே கருதப்பட்டான். அவன் திருமாலின் அவதாரம் என்ற கருத்து நிலவியது. உடையார், ஆழ்வார், பெருமாள் ஆகிய சொற்கள் இருவருக்கும் பொதுவாக வழங்கப்பட்டன. சமய குருக்கள் அரசவையிலேயே சமயக் கடமைகளில் துணை புரிந்தனர். அவர்களுக்கும் உடையார் எனப் பெயர் வழங்கியது குறிப்பிடத்தக்கது.

கல்வி, உயர்மட்டத்திலிருந்த குடிமக்களுக்கே உரியதாக இருந்தது. வேதம், புராணம், இலக்கணம், தர்க்கம் போன்ற வடமொழிக் கல்வியே நிறுவனங்களில் அளிக்கப்பட்டது. பிற தொழில்நுட்பங்கள், கலைகள் ஆகியவை குல மரபில் வழிவழியாகவே கற்றுக் கொடுக்கப்பட்டன.